நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு (சனிக்கிழமை) 18 இரவு ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை , ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர் .
தொடர்ந்து மத்திய மாகாணத்தில் பிற்பகல் நேரங்களில் விடாது பெய்யும் அடைமழை காரணமாகவே நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
செ.திவாகரன் டி.சந்ரு