மகாராணியின் முடிசூட்டு விழாவில் டட்லி சேனாநாயக்கவிற்கு நடந்தது என்ன?

0
288
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு பயணமானார்.
மகாராணியின் முடிசூட்டுவிழா 1953 ஜூன் 2 நடைபெற்றபோது அதில் கலந்துகொள்வதற்கு லண்டன் சென்ற அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு அங்கு ஏற்பட்ட அசௌகரியமான அனுபவத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவுடுத்துவது பொருத்தமாக இருக்கும். மகாராணிக்கு அப்போது 25 வயது. முடி சூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெற்றது.
வருகை தந்திருந்த வெளிநாட்டு அரச தலைவர்களை விழாவுக்கு அழைத்துச்செல்வதற்கு குதிரை வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒரு குதிரை வண்டி போதாமல் இருந்தது.
அதனால் ஆபிரிக்க நாடொன்றின் இராஜதந்திரியான பெண்மணியொருவருடன் சேர்ந்து ஒரே வண்டியில் செல்ல முடியுமா என்று டட்லியிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டனர். ஆத்திரமடைந்த அவர் அப்படியானால் அடுத்த விமானத்தில் தான் இலங்கை திரும்பிவிடப்போவதாக அச்சுறுத்தினார்.
நீங்கள் அவ்வாறு நாடு திரும்பினால் மாட்சிமைதங்கிய மகாராணியை அவமதிப்பதாகிவிடும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அதிகாரிகள் அவரிடம் கூறினர்.
இன்னொருவருடன் சேர்ந்து குதிரைவண்டியில் செல்லுமாறு தன்னைக் கேட்பது இலங்கையை அவமதிப்பதாகும் என்று டட்லி பதிலுக்கு சொன்னார்.
அவரிடம் மன்னிப்பு கேட்ட அதிகாரிகள் விசேட குதிரை வண்டியொன்றை அவருக்காகஅவசரமாக ஏற்பாடு செய்துகொடுத்தனர். அதில்தான் டட்லி முடி சூட்டு விழாவுக்கு சென்றார்.