இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அட்டன் -டிக்கோயா நகரசபை மறுப்பு –  நோர்வூட் பிரதேசசபை அதிரடி தீர்மானம்

0
1367

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட வனராஜா வட்டாரம் – தரவளை கொலனி வாழ் மக்கள் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக இதுவரை காலமும் பயன்படுத்திய மயான பூமியை தொடர்ந்து பயன்படுத்த நோர்வூட் பிரதேசசபையில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த சபையமர்வு இன்று  (18/08/2022)  டின்சின் மண்டபத்தில் சபைத்தலைவர்  ரவி குழந்தைவேலு தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சமர்வில் வட்டார உறுப்பினர் மு.இராமச்சந்திரன் வனராஜா வட்டாரத்திற்கு உட்பட்ட தரவளை கொலனி மக்கள் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக இதுவரை காலமும் பயன்படுத்தி வந்த பொது மயான பூமியில்  இறப்பவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய அட்டன் – டிக்கோயா நகரசபை அனுமதி மறுத்துள்ளமை தொடர்பில், விசேட பிரேரணை ஒன்றை முன் வைத்து உரையாற்றினார்.

விசேட பிரேரணையில் மு.இராமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றியதாவது…

நோர்வூட் பிரதேசசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட  வனராஜா வட்டாரத்திற்கு உட்பட்ட தரவளை கொலனியில் வாழ் மக்கள் அங்கு உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்து வந்த பொது மயானத்தில், நேற்று (17/08/2022)  மாலை மரணமான கதிர்வேல்  என்பவரின் உடலை நல்லடக்கம் செய்ய அட்டன் – டிக்கோயா நகரசபை தலைவர் மற்றும் டிக்கோயா வட்டார நகரசபை உறுப்பினரும்  அனுமதி  வழங்க முடியாதென  மறுத்துள்ளமை வேதனையளிக்கிறது.

இந்த மனிதாபிமானம் அற்ற செயலால் பாதிப்படைந்துள்ள அன்னாரது குடும்பத்திற்கு நோர்வூட் பிரதேசசபை உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மரணமானவரின் உடல் இன்று மாலை 03 மணிக்கு நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது நேரம் காலை 11. 30 இந் நேரம் வரை  மயான பூமியில் புதை குழி வெட்டுவதற்கு  அட்டன் – டிக்கோயா நகரசபை  நல்லடக்கம்  செய்ய  அனுமதி மறுத்துள்ளதாகவும் இன்னும் மூன்றரை மணித்தியாலங்களே   உள்ளதென என்னிடம் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர் என்றார்.

சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு

இதனையடுத்து சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு உரையாற்றியதாவது,

மயான பூமியை பிரதேசசபை அல்லது நகரசபை பரமாரிப்புகளை செய்யலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.   அட்டன் – டிக்கோயா நகரசபையின் இந்த நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நோர்வூட் பிரதேசசபையின் சார்பாக   எனது வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறித்த மயான பூமி நோர்வூட் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பகுதி ஆகவே  இதுவரை காலமும் தரவளை கொலனி வாழ் மக்கள் பயன்படுத்திய மயானத்தை தொடர்ந்து பயன்படுத்த நோர்வூட் பிரதேசசபை அனுமதியளிக்கிறது என்பதோடு இன்றைய தினமும் அதே மயான பூமியில் அன்னாரது உடலை நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கிறேன்  என்றார் .

இதனை சபையமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும்  ஆதரித்ததையடுத்து  வனராஜா வட்டாரத்திற்கு உட்பட்ட தரவளை கொலனி வாழ் மக்கள் இனியும் தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய அதே மயான பூமியை பயன்படுத்த ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here