காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

0
153

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் இன்று (5) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரித்த பொலிசார் சந்தேகத்திற்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரணவிசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று (05)  தோண்டியபோதே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம் பெண் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால்  மூதூர் பொலிஸ் நிலையத்தில் யூலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை முன்னெடுத்துவந்த நிலையில்  சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில்  கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் பாழடைந்து இருக்கின்ற கிணறு ஒன்றை தோண்டுவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த யுவதியும், அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும் இந்நிலையில் கடந்த மே மாதம் குறித்த யுவதி காதலனுடன் மட்டக்களப்பிற்கு சென்று வசித்து வந்ததாகவும் மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயிருந்ததாகவும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here