தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

பாரதத்தின் தலைநகரான புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின், தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்களுக்கான வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பிலும் தமதுரையில் அமைச்சர் சுட்டிக்காட்டி, உரையாற்றினார்.

தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்காக தொழிற்சங்கங்கள் வாதிடுவதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

தொழிலாளர்கள் முன்னோப்போதும் இல்லாத வகையிலான புதிய சவால்களையும் இன்றைய நவீன உலகில் எதிர்கொள்கின்றனர்.

நவீன பொருளாதார யுகத்தில் டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு திறனின் அறிமுகம், கிக் பொருளாதாரம் போன்றவற்றிற்கு ஏற்புடையதாக தொழிற்சங்கங்கள், மரபுவழி அணுகுமுறையில் இருந்து நவீன தொழில்நுட்ப உள்ளடக்கங்களை கொண்ட பொறிமுறையை உள்வாங்க வேண்டும்.

மேலும், பிராந்தியத்தின் பலதரப்பட்ட தொழிலாளர்களை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கங்களுக்குள்ளேயே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை அடைவது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தொழிற்சங்கங்கள் அவர்களின் பின்னணி அல்லது தொழிலைப் பொருட்படுத்தாமல், அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமதுரையில்,  பொருளாதாரத்தின் உலகளாவிய தன்மையை அங்கீகரித்ததோடு, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்காக ஒன்றிணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்தார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளையும் எடுத்துரைத்து அமைச்சர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

ஊடக செயலாளர்