தேர்தலில் போட்டியிடுவது குறித்தது ஜனாதிபதி ரணில் கூறியது

0
116

 ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

காலி நகர சபை மைதானத்தில்   (27) நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

சவால்களில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, பேசிகொண்டிருக்காமல்  தனது கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கையெனவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.

பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்,காலி மாவட்டத்தைச் சேர்ந்த 15,000 இற்கும் அதிகமான மக்களும் அரசாங்கத்தின் எதிர்கால  வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இவர்கள் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக உறுதிமொழிந்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

காலி மாவட்டம் எனக்கு முக்கியமானது. எனது தந்தை வழிச் சமூகம் இங்கிருந்தே வருகிறது. இந்த நகரத்தோடு அந்த தொடர்பு உள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னதாக சிந்திக்க வேண்டியிருந்தது.  இரண்டு வருடங்களுக்கு முன்பு இதனை விடவும் சிந்திக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க எவரும் இல்லாத நிலையிலேயே எனக்கு வழங்கப்பட்டது. தெற்காசியாவில் முதல் முறையாக பிரதமர் பதவி யாசகம் செய்தது. நீங்கள் அடைந்த துயரங்களைக் கண்டுதான் பதவியை ஏற்றுக்கொண்டேன். உரம், எரிபொருள், எரிவாயு, பாடசாலை செல்லவும் வழியிருக்கவில்லை. நாட்டை ஏற்று இரு வருடங்களில் அந்த நிலையை மாற்றிக் காட்டினேன்.

நீண்ட நேரம் பேசுபவன் நான் அல்ல. ஒரு வேலையை ஏற்றுகொண்டால் அதனை செய்து முடிப்பேன். கஷ்டமான காலத்திலேயே நாட்டை ஏற்றேன். உணவு பெற்றுத்தந்தோம். உரத்தை பெற்றுத்தந்தோம், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவாவிடம் உதவிகோரினேன். உலக வங்கியிடம் உதவி கோரினேன். ஜப்பானிடம் உதவி கோரினேன். இவ்வாறுதான் பயணத்தை முன்னெடுத்தேன்.

உதவியைப் பெற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுத்தேன். 6 மாதங்களில் இந்த நிலையை மாற்ற முடியும் என்று நம்பினேன். கடன் பெற முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை குறைந்துள்ளது.

பல பிரச்சினைகள் இன்றும் உள்ளன. மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும்.

அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம். நாட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டு கவலைப்படுகிறோம். அதனை நிவர்திக்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். சமூர்த்திக்கு மாறாக ‘அஸ்வெசும’ திட்டத்தில் மூன்று மடங்கு அதிகமாக நிவாரணம் வழங்குகிறோம். பயனாளிகள் எண்ணிக்கையும் 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  புலமைப்பரிசிலும் வழங்குகிறோம்.

எந்த அரசாங்கத்திலும் காணி உறுதிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை. முடிந்த வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம். தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படும். பொது மக்களுக்கு உரிமை வழங்குவதே எனது நோக்கமாகும். அதனை கைவிடப்போவதில்லை. உங்களை செல்வந்தர்க்காக்கும் வரையில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கிராமங்களில் வறுமையை போக்க விவசாய நவீனமயமாக்கலை செய்கிறோம். நாட்டில் தற்போது நிலைத்தன்மை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளனர். வௌ்ளையர்கள், ரஸ்யர்கள், இஸ்ரேலியர்கள், யுக்ரேனியர்கள் என பலரும் இலங்கைக்கு இன்று சுற்றுலா வந்துள்ளனர்.  அவர்கள் ஊடாக கிடைக்கும் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

இவற்றுக்காக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியம்.  கடன் வழங்கிய நாடுகளின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய அவசியமும் உள்ளது. அவற்றை சிதைத்துவிட்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்று கூறினால் அது பொய்யானது. அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றனர்.

 

அதனாலேயே எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறேன். எமக்கு இப்போது கிடைக்கும் நிதி கிடைக்காவிட்டால் மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை வரும். எனவே அரசியலுக்காக பொய்களைச் சொல்லி நாட்டை மீண்டும் வீழ்த்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.  நாடு சரிவடைந்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஓட்டம் பிடித்துவிடுவார்கள். ஒலிம்பிக் வீரர்களையும் மிஞ்சி ஓடுவார்கள்.

அதனால் மேற்சொன்ன ஒப்பந்தங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல கடமைபட்டுள்ளோம். இன்று ரூபாய் வலுவடைந்துள்ளது. வட்டி வீதம் குறைகிறது. இந்த பயணத்தை தொடர்ந்தும் செல்வோம். எமக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லை. வேறு வழியிருந்தால் அதனையும் சொல்லுங்கள்.  பொய் சொல்லி காலம் கடத்தக்கூடாது.  இப்போது உதவிகள் கிடைக்கின்றன. நாட்டை முன்னேற்ற வழி கிடைத்துள்ளது.

நாட்டு மக்களைப் போலவே இளையோரின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டும். இலட்சக் கணக்கில் இளையோர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது. நாம் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளின் நிலையை நாம் காண்கிறோம்.  அவ்வாறு ஏன் எம்மால் வாழ முடியாது. பொய்களை சொல்லிக்கொண்டிருந்தால் தான் இ்ந்த நிலையில் இருக்கிறோம். 2048 பற்றி நான் பேசிய போது எதிர்கட்சியினர் ஏளனமாக சிரித்தார்கள். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 2048 ஆம் ஆண்டிலேயே ஐம்பது வயதை அடைவார்கள் என்பது எதிர்கட்சியினருக்கு விளங்கவில்லை.

நாட்டுக்கு இன்னும் பல முதலீடுகளை கொண்டு வர வேண்டும். தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். ஹோட்டல்களைக் கொண்டுவர வேண்டும். நாம் வலுவடைய வேண்டியது அவசியம்.  இன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 85 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது. இந்த தசாப்தத்தின் இடைப்பகுதியில் அதனை 350 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க வேண்டும். அதனை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை எம்மிடம் உள்ளது.

சீனா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளால் முடியும் என்றால் எம்மாலும் செய்ய முடியும். இளையோரின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். போராட்டங்களை செய்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. எதிர்காலத்தில் இளையோரே நாட்டை ஏற்கப் போகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கேள்வியெழுப்ப அவர்களுக்கு உரிமை உள்ளது போலவே, அவர்களுக்கு பதிலளிக்க நாமும் கடமைப் பட்டிருக்கிறோம்.

அவ்வாறான பயணத்தை செல்லவே இன்று நான் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியிருக்கிறேன். பழைய அரசியல் முறையிலிருந்து நாம் விடுபட வேண்டும். நான் அமைச்சுக்களைப் பகிர்ந்தளித்த போது அவர்களின் இயலுமையை அறிந்திருக்கவில்லை. ஆனால் திறமையாக செயற்படுவோர் இருக்கின்றனர் என்பது தெரிகிறது. அரசியலை பற்றி சிந்திக்காமல் நாம் செயலாற்றுகிறோம்.

அதனாலேயே நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது. புதிய முறையில் சிந்தித்து செயலாற்றினோம். நாட்டை நாம் பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயலாற்றக் கூடாது. சஜித் பிரேதமதாச, அனுரகுமார திசாநாயக்க போன்றவர்களின் நிலைப்பாடு என்ன?  கட்சிகளை உடைப்பது எனது நோக்கமல்ல புதிய வகையில் சிந்தித்து அனைவரும் ஒன்றுபட்டுச் செல்ல வேண்டும் என்றே கூறுகிறேன்.

எமது இறுதி காலத்தில் அவற்றை செய்ய கடமை பட்டிருக்கிறோம். நான், மஹிந்த ராஜபக்‌ஷ, கரு ஜயசூரிய, சந்திரிகா, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அரசியலில் இறுதி கட்டத்தை நெருக்கியிருக்கிறோம். எனவே முரண்பாடுகளை விடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். முரண்பாடுகளை வளர்த்ததால் தான் இந்த நிலை வந்தது. இனியாவது முன்னோக்கிச் செல்வோம்.

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி புதிதாக சிந்திப்போம். 10 வருடங்களில் இந்த நாட்டை சிங்கப்பூரை போல கட்டியெழுப்ப முடியும். அதற்கான பயணத்தில் ஒன்றிணைந்து செல்வோம். நாட்டின் வெற்றியை உறுதி செய்வோம்!” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

– வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி

“தீர்மானமிக்க தேர்தலொன்றை எதிர்கொண்டுள்ளோம். 2 வருடங்களுக்கு முன்பிருந்த பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை கைவிடக்கூடாது. அதற்காகவே கட்சி, இன,மத பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டில் ஏற்பட்ட நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

2022 ஏப்ரலில் நாட்டில் 13 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. எரிபொருள்  இருக்கவில்லை. சமையல் எரிவாயு இருக்கவில்லை. 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. யாசகம் பெரும் நாடாக மாறினோம். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம். திருடர்களோடு இருக்க முடியாததால் அவர் ஆட்சியை ஏற்கவில்லை என்று கூறினர்.

ஆனால் அதில் உண்மையில்லை.  ஆட்சியை ஏற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது மத்திய வங்கி ஆளுநரையும் திறைசேரியின் செயலாளரையும் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். அந்த அதிகாரிகளை அழைத்து அவருக்கு மூன்று மணித்தியாலங்கள் நாட்டின் நிலையை தௌிவுபடுத்தினோம். ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம் போன்ற எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால் அவர்களினதும், கட்சியினதும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் நாட்டை பொறுப்பேற்கத் தயங்கினர்.

அப்போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு, குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெத்தார்.  நாம் கற்றுகொண்ட பாடங்களை ஒருபோதும் மறக்க கூடாது.இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவது தவறாகும். எனவே நாம் தற்போது ஏற்படுத்தியுள்ள நிலைத்தன்மையை பாதுகாப்பதாக? அதற்கு முரணாக செல்வதாக என்று தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ‘அஸ்வெசும’, ‘உறுமய’, திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் என்பவற்றை ஆரம்பித்து மக்களுக்கு நிவாரணம் வழக்கி வருவதோடு மறுமுனையில் தடைப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும் மீள ஆரம்பிக்க வழி செய்துள்ளார். எனவே நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அதனை செய்யக்கூடிய தலைவருடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.

-கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண

“செப்டெம்பர் 22ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வந்த பின்னரும் ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக செய்யப்படுவார் என்று நம்புகிறோம். “என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் பரவலை வெற்றிகொள்ள எம்மால் முடிந்தது.  அபிவிருத்தி அடைந்த நாடுகள் கூட எம்மைப்போல கொவிட் நிலைமையை நிர்வகிக்க முடியவில்லை. அதன் பின்னர் நாம் பொருளாதார நெருக்கடி வந்ததால் மக்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் நாட்டுக்கு ஒரு தலைவரும் இ்ன்றி தவித்தனர்.

அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டவர் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க என்பதை மறந்துவிடக்கூடாது. காலியிலும் பல அபிவிருத்திச் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டன. 300க்கும் மேற்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்திருக்கிறோம். அந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு சரியான முறையில் நிதி தேடுவதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதியே காண்பித்தார். இன்று நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு அதிகரித்து,  பணவீக்கம் குறைந்துள்ளது. ” என்று தெரிவித்தார்.

-இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க

“இன்று ஜனாதிபதியின் முகத்தில் வழமையை விடவும் பொழிவு தெரிகிறது. வெற்றி பெரும் கூட்டத்துடன் இணைந்து கொள்வதால் ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகியுள்ளது. சுனாமி வந்த போது கடல் அருகில் இடம்பிடிக்கச் சென்ற மக்கள் இருக்கும் நாட்டில் ஜனாதிபதி பதவியை இலவசமாக வழங்கியபோதும் ஒருவரும் ஏற்கவில்லை.

 

சஜித் பிரேமதாசவும், அனுரவும் பகலில் ஒன்றையும் இரவில் ஒன்றையும் பேசுகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தனது அனுபவத்தைக் கொண்டு நாட்டை சுமூகமான நிலைமைக்கு திருப்பினார். சில எம்.பிக்கள் வருடாந்தம் கட்சி தாவுகின்றனர்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே

“கடந்த 30 ஆம் திகதி மாத்தறையில் இந்த பொதுக்கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கண்டி, கம்பஹாவில் நடத்தப்பட்டு இன்று காலியில் நடத்தப்படுகிறது.  இது நான்காவது கூட்டமாக இருந்தாலும் இங்கு பெருமளவில் மக்கள் குவிந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடப் போவதில்லை என்று பலரும் கூறினர். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் தினத்திலேயே கட்டுப்பணம் செலுத்திய தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று எமது மேடையில் இருக்கிறார். இந்த மேடையில் பொதுஜன பெரமுனவின் 40 க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ளனர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அதாவுல்லா, மலையகத்தில் தொண்டமான் போன்ற மக்கள் பிரதிநிதிகளும் எம்மோடு உள்ளனர். அதனால் வெற்றியை ஈட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெல்வார் என்றும் மக்களுக்கு உறுதியளிப்போம்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால்களை ஏற்க அஞ்சுபவர். இலவசமாக பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ள முடியாதவர் அவரால் தேர்தலை வெல்ல முடியாது. மக்கள் விடுதலை முன்னணி புதிய முகத்துடன் தேர்தலில் களமிறங்குகிறது. அவர்களின் கூட்டணியில் அராஜகம் செய்த பலர் உள்ளனர்.

இன்றைக்கு இரு வருடத்திற்கு முன்னதாக பாடசாலை செல்ல மாணவர்களுக்கு வழியிருக்கவில்லை. எரிபொருள் இருக்கவில்லை. பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பொருளாதாரம் சரிந்த நாட்டில் மக்கள் பசியில் இறந்துபோன நிலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மாற்றினார்.

அவரை வெல்ல வைக்க இதற்கு முன்னதாக நாம் ஒருபோதும் பிரசாரம் செய்ததில்லை. அரசியல் செய்யவும் எமக்கு நாடு இருக்க வேண்டும். அதற்காகவே இன்று நிபந்தனை இன்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம்.  எதிர்கட்சியிலிருந்து பலரும் எம்மோடு இணையவுள்ளனர். வடக்கின் பல அரசியல் கட்சிகளும் எம்மோடு இணைவர்.

எம்மிடத்தில் நாட்டை மீட்கும் நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது. அதனால் நாட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கமை அடுத்த ஐந்து வருடங்களும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

-ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான்

“இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலையை நாம் மறந்துவிட முடியாது. அந்த நேரத்தில் நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்தார். அவர் தேர்தலில் வென்றால் நாடு மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும்.

எனவே மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற வேளையிலும் எதிர்கட்சித் தலைவர் நிபந்தனை கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். நாட்டை மீட்ட ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.” என்று தெரிவித்தார்.

-தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார

“இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்கவே தெரிவாக போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. நாட்டின் தேவைக்காக நாம் பேதங்களை மறந்துவிட்டு இணைந்திருக்கிறோம்.

நாட்டு மக்கள் பல கஷ்டங்களை அனுபவத்த வேளையில் சிலர் நாட்டை விட்டுச் சென்ற போது,  அந்த நேரத்தில் மக்களின் கஷ்டங்களை அறிந்து செயற்பட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே முடிந்தது. சவால்களை ஏற்றுக்கொள்ளும் முதுகெலும்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தது.

அன்றிலிருந்து புலமைப்பரிசில், காணி உறுதிகள், நிதி நிவாரணங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி மக்களுக்கு வழங்கினார். இன்று டொலர் பெறுமதி குறைந்து நாட்டில் மக்கள் மூச்சு விடும் நிலைமை உருவாகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் நாட்டை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

மக்களின் பக்கமிருந்து தீர்மானம் எடுக்கும் தலைவர் நாட்டை ஆளுகிறார் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவுசெய்த போது மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிடைதுள்ளார்.

இன்று ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைக்கு வலைந்துகொடுக்காத நாடாக இந்த நாடு நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலைமை தொடர ஜனாதிபதியுடன் கைகோர்த்துகொள்ள வேண்டும். மற்றவரின் ஆடையை வாங்கி அணிவது போல நாட்டை ஆள முடியாது. அச்சமில்லாத ஒரு தலைவராலேயே இந்த நாட்டை ஆள முடியும்.” என்று தெரிவித்தார்.

-காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள

(26) வரை எங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் பதில் கிடைத்துவிட்டது.

கடந்த இரு வருடங்களில் நாட்டின் மீட்சிக்காக அர்ப்பணித்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் இருந்தது. அந்தக் கேள்விக்கும் நேற்றே விடைகிடைத்து.

இன்று கட்சி வேறுபாடின்றி இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக இந்த மேடையில் ஒன்றுபட்டுள்ளோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான சட்டத்தரணி மொஹான் டி சில்வா, கீதா குமாரசிங்க, பியல் நிஷாந்த, டி. பி. ஹேரத், திலும் அமுனுகம, கனக ஹேரத், லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, பிரமித பண்டார தென்னகோன், செஹான் சேமசிங்க, அனுப பஸ்குவல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட  ஆலோசகர் ருவன் விஜேவர்தன,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், வஜிர அபேவர்தன, சஹான் பிரதீப், கோகிலா குணவர்தன, மேஜர் பிரதீப் உந்துகொட, முதித சொய்சா, லலித் வர்ணகுமார, ராஜிகா விக்கிரமசிங்க, ஜகத் சமரவிக்ரம, குமாரசிறி ரத்நாயக்க, அகில எல்லாவல, மதுர விதானகே, ஜயந்த வீரசிங்க, ஏ. எல். எம். அதாவுல்லா, கலாநிதி கயாஷான் நாவந்த, குலசிங்கம் திலீபன், எஸ். சி முத்துக்குமாரன, முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பீ. ஹரிசன், விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here