நகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

0
42

திருகோணமலை நகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று (18) காலை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். பொலிசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலை நேரத்தில் தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் நகர சபையின் முன்பாக ஒன்றுகூடி சில மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கடமையை செய்ய சென்ற நகரசபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்காக அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் 5 ஊழியர்கள் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் (17) விசாரணைக்காக வரவழைத்து கைது செய்யப்பட்டதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பொலிசாரின் பக்கச்சார்பான நடவடிக்கைக்கு நீதி கோரியும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அத்துடன் தாம் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமையை செய்கின்ற வேளைகளில் தொடர்ந்தும் தாக்கப்படுவதாகவும் இதனால் தங்கள் கடமையை செய்வதற்கு அச்சத்துடன் இருப்பதாகவும் கடமையை செய்கின்ற நேரத்தில் தமக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் நகர சபை செயலாளரிடம் இதன்போது கையளித்தனர்.

மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாகவும் சிலரை ஆளுநரின் செயலாளருடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்து குறித்த விடயம் நீதிமன்றில் இடம்பெற்று வருவதன் காரணமாக அது நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் சேவையை நாடி வருகின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்ததாத வகையில் சேவையில் ஈடுபடுமாறும் கோரியதற்கு இணங்க ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மழை வெள்ளம் காரணமாக திருமலை – விகாரை வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வடிகானை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்கள் ஈடுபட்டபோது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நகரசபை ஊழியர் ஒருவரை தாக்கியிருந்ததாகவும் பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, நகரசபை செயலாளர் மற்றும் பொலிசார் சமரசத்துடன் குறித்த விடயத்தை முடித்து வைத்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் (17) நகரசபை ஊழியர்கள் 5 பேர் திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வரழைக்கப்பட்டு கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையிலேயே குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று (18) நகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here