படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்

0
121

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்  ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று வெள்ளிக்கிழமை (31) அவரின் திருவுருவ படத்திற்கு  சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச விசாரணை கோரி ஊடகவிய லாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நினைவேந்தலுக்கு ஏற்படு செய்திருந்தது

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன்,  முன்னால் பாராளு மன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்;னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கு படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச  விசாரணை வேண்டும் எனும் தொனிப் பொருளில் ஆர்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேவேளை மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக அவரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை அரசாங்கம்  இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த போதும் அதன் குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை.அத்தோடு இந்த நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.

இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும்.

இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.
இலங்கையில் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின்  படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கவேண்டும் என மட்டு ஊடக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

(கனகராசா சரவணன் )
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here