​​பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா? – ஜனாதிபதி

0
56

போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை
நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான
தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள்
செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பன நாட்டுக்கு நற்செய்தியா?
துயர் செய்தியா? என்று பாராளுமன்றத்தில் (02) எதிர்க்கட்சித்
தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத்
தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர்
பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா? என்று
பதில் கேள்வி கேட்ட ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

போஷாக்கு குறைபாட்டினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது நல்லதா கெட்டதா என
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இது கெட்டதாகும். அதனால்தான், அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தினோம்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பத்து கிலோ
அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.  எனவேதான் பாடசாலை மாணவர்களுக்கு உணவு
வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வறுமை நல்லதா கெட்டதா என்று கேட்கிறார்கள்.

வறுமை கெட்டது!

அதனால்தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டரை லட்சம்
பேருக்கு அந்த வீடுகளின் உரிமை வழங்கப்படுகிறது. வேறு என்ன வழங்க வேண்டும்?

வேலையின்மை நல்லதா கெட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

வேலையின்மை நல்லத்தல்ல என்பதாலேயே புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறோம்.
புதிய முதலீடுகளையும் கொண்டு வருகிறோம்.

அதேபோல் நான் இன்னும் ஒரு விடயத்தை கேட்க விரும்புகிறேன்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து மக்கள் சிரமப்படும் போது, ​​பிரதமர் பதவியை
ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 200 பில்லியன் ரூபாய் நிலுவைத்
தொகை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி உங்களுக்கு வருத்தம்
அளிக்கிறதா? மீண்டும் வௌிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது கண்டி அதிவேகப்
நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வோம். அது வருத்தமளிக்கும்
செய்தியா? அது தொடர்பான அறிக்கைகளை கபீர் ஹசீம், ஹர்ஷ டி சில்வா
ஆகியோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

இப்போது தனியார் பிணை முறி வழங்குனர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தும்
வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. Clifford Chance நிறுவனம் இது பற்றிய
தகவல்களை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இது
குறித்து ஏனைய தரப்புக்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்
நிபந்தனைகள் தெரியவரும் என்பதைாலேயே அவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் மூன்று ஒப்பந்தங்களையும் ஒரே நேரத்தில் சமர்பிக்குமாறும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் போன்றே கானாவும் இவ்வாறான
ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. ஆனாலும் கானா அந்த விடயங்களை இன்று
வரையில் வௌியிடவில்லை.

குறிப்பாக, இந்த விடயங்கள் அனைத்தும் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச
நிதி தொடர்பான செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன. குழுவில் இருப்போர்
அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பர். ஹர்ஷ டி சில்வாவைக் கண்டு
உங்களுக்கு பொறாமை ஏற்படுகிறதா? அதனை செய்வதை நீங்கள் விரும்பவில்லையா?
இப்போது இவ்வாறு பேசுவதன் அர்த்தம் என்ன? ஹர்ஷ டி சில்வாவின் குழு இரு
தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் குழு எந்த மாதிரியான அறிக்கையைத் தயாரிக்கும் என்பது எமக்குத்
தெரியாது. அந்த அறிக்கை சாதகமாக வருமா, எதிராகத் தயாரிக்கப்படுமா
என்பதும் எமக்குத் தெரியாது. இப்போது விவாதிப்பதை விடுத்து அறிக்கையின்
படி செயல்படுவோம். கலாநிதி ஹர்ஷ டி சில்வா பற்றி கேள்வி எழுந்தால் அது
குறித்த விவாதமொன்று தேவைப்படுமா? இல்லாவிட்டால், நாலக கொடஹேவாவை
எதிர்க்கட்சியின் ஆலோசகராக நியமித்து ஒரு தடவை வீழ்ந்த குழியில் மறுமுறை
விழ முயற்சிக்கிறார்களாக என்ற கேள்விக்குறியும் உள்ளது. ” என்று
ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
02.07.2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here