தலவாக்கலை பகுதிக்கு மஹியங்கனை பகுதியிலிருந்து மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியில் வழியான போக்குவரத்து 1 மணித்தியாலம் பாதிக்கப்பட்டது எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர்.
இவ்விபத்தின்போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் வீதியில் குடைசாய்ந்துள்ளதென தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தினால் லொறியிலிருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.