முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை மீட்க சொத்து மீட்பு அமைப்பு ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியல்வாதிகள் அல்லது பிற தனிநபர்களின் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு புதிய அரச அமைப்பு ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சொத்து மீட்பு அமைப்பு என்று அந்த அமைப்பு அழைக்கப்படும். உலகின் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இவ்வாறான அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
வெளிநாட்டில் அல்லது உள்நாட்டுக்குள் பண மோசடி மற்றும் பிற சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்துள்ள சட்ட விரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.