இராவணாகொடவில் வீதியின் குறுக்கே குடைசாய்ந்து லொறி விபத்து – குடும்பஸ்தர் பலி

0
378

கொட்டகலை – திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் லொறி வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (48) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில், வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்தபோது, லொறியில் பின்நோக்கி சென்று குடைசாய்யும் வேளையில் இவரின் மீது அதிலிருந்த கூரைகள் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. 

உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here