திருகோணமலையில் 2ஆம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடக ஆர்வலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (23) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வ .ராஜ்குமார் தலைமையில் இடம் பெற்றது. சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் தமிழ் பேசுவோர்களுக்கு சிங்கள மொழி கற்கை என 150 மணித்தியாலங்கள் கொண்ட பாடநெறி இடம் பெற்றது.
இதனை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் 44 ஊடகர்கள் ஊடக ஆர்வலர்கள் இதனை பெற்றனர்.
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த பாடநெறி இடம் பெற்றதுடன் தேசிய மொழிக் கல்வி நிறுவகம் ஊடான வளவாளர்களால் வகுப்புக்கள் இடம் பெற்றது . கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் எழுத்தாணி கலைப் பேரவைக்கு ஊடகர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பொ.சற்சிவானந்தம் மற்றும் தேசிய மொழிக் கல்வி நிறுவக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(அ . அச்சுதன் )


