கல்விச் சேவையில் பல்வேறு பதவி நிலைகளில் சேவையாற்றிய கவிஞர் சுப்பிரமணியம்பிள்ளை முரளிதரன் 07.06.2024 வெள்ளிக்கிழமை அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். 08.06.2024 அன்று அவரது அறுபதாவது பிறந்தநாள் ஆகும்.
மலையக மண்ணின் மைந்தரான இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தர் ஆவார். விஞ்ஞானப் பட்டதாரியாகிய இவர் சிறந்த கவிஞர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கையில் ஹைக்கூ கவிதைத் துறையின் முன்னோடியாக இவரைக் குறிப்பிடுவர். இவர் ஆக்கிய கூடைக்குள் தேசம் என்ற ஹைக்கூ கவிதை நூல் புகழ் பெற்ற நூலாக விளங்குகின்றது. இதைவிட மலையக இலக்கியத் தளங்கள், தியாக இயந்திரங்கள், தீவகத்து ஊமைகள் உள்ளிட்ட பல நூல்களை ஆக்கி வெளியிட்டுள்ளார்.
விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவாகி கொட்ட்கலை ஆசிரிய கலாசாலையின் அதிபர் சிறிபாத கல்வியியல் கல்லூரி பீடாதிபதி என ஆசிரிய கல்வித் துறையில் சேவையாற்றி தொடர்ந்து இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விக் கிளைப் பணிப்பாளர், தமிழ்ப்பாடசாலை அபிவிருத்திக்கான பணிப்பாளர், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் எனப் பல்வேறு பதவி நிலைகளை வகித்து அண்மையில் கடந்த 2024 ஏப்பிரலில் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
கல்வி அமைச்சில் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் எய்தக்கூடிய உயர் பதவிநிலையில் சேவையாற்றி ஓய்வு பெறும் திரு. சு. முரளிதரன் அவர்களின் ஓய்வுக்காலம் சிறப்படைய எமது மனமுவந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.