நுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

0
41

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் 476/ஏ கிராம சேவகர் பிரிவில் டெஸ்போட் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுமூகமாகவும் , அமைதியான முறையிலும் தேர்தல் வாக்களிப்பு இடம் பெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதில் நுவரெலியா நல்லாயன் மகளிர் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ,சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளருமான சுப்பையா சதாசிவம் ஆகியோர் வருகை தந்து வாக்குகளை அளித்து சென்றனர். எனினும் இன்று காலை காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 வரை வாக்களிப்பு இடம்பெற உள்ளது.

நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வி.தீபன்ராஜ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here