ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைக்கு பிரித்தானிய புலனாய்வு பிரிவிடம் உதவி கோரவுள்ளோம்

0
248

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என தெரிவித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முழுமையற்ற தன்மை காரணமாக இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அவர்களின் புலனாய்வு சேவைகளின் உதவியை கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜூலை 21 முதல் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், நாட்டிலும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் முன்னேறி வருவதாகவும் விளக்கமளித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என விளக்கமளித்த அவர், பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19வது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சமூகத்திற்குள் இருக்கின்றது. இந்த கூறுகள் நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பதில் இருந்து தடை செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதின் – ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here