கதிர்காமக் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று

0
358

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாணிக்க கங்கையோரமாக அமைந்துள்ள புனித ஸ்தலம் கதிர்காமம் ஆகும். கதிர் என்றால் சூரியன் என்றும், காமம் என்றால் அன்பு என்றும் கூறுவர். இதனால் ‘சூரியனின் அன்பு’ நிறைந்த இடம் என்று கதிர்காமம் கருதப்படுகின்றது.

கதிர்காமக் கந்தனின் ஆடி மகாஉற்சவம் ஆடி மாதம் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று 12 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுறுகின்றது. இந்துக்கள் தங்களின் சிறப்பு நிறைந்த இறைவனாக கதிர்காமக் கந்தப்பெருமானை கருதி வழிபட்டு வருகின்றனர். கந்தபுராணத்தில் உள்ள ஏமகூடப் படலத்தில் கதிர்காமச் சிறப்புச் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தனை சிறப்பு வாய்ந்தது கதிர்காமம் திருத்தலம்.

பல்லின மக்கள் சங்கமிக்கும் இடமாக தொன்றுதொட்டு விளங்கிக் கொண்டிருப்பது கதிர்காம முருகன் ஆலயமாகும். சிங்கள மொழி இலக்கியமான ‘ஸ்கந்த உபாத’ என்னும் நூலில் எல்லாள மன்னனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் கதிர்காமத்தைச் சிறப்பித்துச் சொல்கின்றது. தொல்காப்பியம் கூறும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி பூசை செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள், திருமுருகாற்றுப்படை கூறும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகின்றார்கள்.

கப்புறாளைமார் வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வருகின்றனர். இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீமிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்துமத வணக்கமுறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைநிற திருநீறு கதிர்காமம் வரும் மக்களால் பூசப்படுகின்றது.

சிங்கள மக்கள் ‘கதிரகம தெய்யோ’ என்று வழிபட்டு வருகின்றார்கள். அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கு முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கின்றது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள். வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகின்றனர். இப்படியே தமிழ்,சிங்கள மக்களின் நம்பிக்கையும் இருப்பதோடு, இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.

முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை இங்கு வள்ளியோடு தங்கி விட்ட கந்தக் கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோற்றுப் போகவே வள்ளியும் இங்கேயே தனிக்கோயில் கொண்டுவிட்டதாகவும் ஐதீகக் கதைகள் உள்ளன.

இறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளிமலை இருக்கின்றது. அங்கே வள்ளிமலை கோயில் உள்ளது. தனியே தேவசேனா கோயிலும் உள்ளது என்றாலும் வள்ளியம்மைக்கே முதன்மையும் சிறப்பும் தரப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகமபூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். எவை எப்படி இருப்பினும் முருகப்பெருமான் அங்கு வீற்றிருக்கின்றார் என்பது இந்து, பௌத்த மக்களின் அசையாத நம்பிக்ைகயாகும்.

போகர் மாமகரிஷி பழனியில் இறைவனால் பழனி ஆண்டவனை நவ பாசாணத்தில் உருவாக்க பணித்த போது, மகரிஷி ஐவரை கதிர்காமம் அனுப்பி அவர்களை இங்கு நிஷ்டையில் ஆளும்படி பணித்தார். அப்போது அவர் அங்கிருந்து சக்தியை ஈர்த்தும் நவகோள்களில் உள்ள பாசாணத்தை ஈர்த்தும் தான் பழனி முருகனின் திருவுருவை முடித்தார் என்றும் முன்னோர் கூறுகின்றனர். சித்தர்கள் அங்கு வாழ்ந்ததற்கான சான்றாக இருப்பது தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் ஆகும்.

இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் எல்லோராலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கிரியானகிரி சுவாமிகள் வடஇந்தியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்தார். இவர் முருகப்பெருமானே துணையென இங்கு வந்த தவசிரேஷ்டர். இவர் இங்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். அவர் உருவாக்கிய யந்திரமே இன்றும் அங்கு இருப்பதுடன் பெரஹராவில் யானை மீது வைத்து வலம் வருகின்றனர்.

கந்தசஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப்பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். கந்தசஷ்டி கவசத்தில் கூட ‘கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா’ என பாடப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here