கந்தசஷ்டி விரதம்

0
234

முருகப் பெருமானின் அவதார நோக்கமே சூரனை வதம் செய்வதற்காக தான். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில், 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாக காட்சி தந்து, சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காத்தது.

முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்ட 5 நாட்களையும் நாம் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடுகிறோம். 6 வது நாள் சூரசம்ஹாரமும், 7வது நாள் முருகன் – தெய்வாணை திருக்கல்யாண வைபமும் நடக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். ஆனால் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தாலும், கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் பிரதான விழாவாக நடப்பது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தான்.

கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் எப்போது ?

2022 ம் ஆண்டில் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6 நாள் கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சூரசம்ஹாரம் அக்டோபர் 30 தேதி நடக்கிறது. சஷ்டி திதி அக்டோபர் 30 ஆம் தேதி காலை தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி காலை முடிவடைகிறது. அக்டோபர் 31 ம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கந்தசஷ்டி விழாவும், அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியும் மிக எளிமையான முறையில் பக்தர்கள் இன்றி திருச்செந்தூர் கடற்கரையில் நடத்தப்பட்டது. இதனால் சூரசம்ஹார நிகழ்வினை பக்தர்கள் டிவி நேரலைகளில் மட்டுமே கண்டுமகிழ்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வழக்கமான உற்சாகத்துடன் மிக கோலாகலமாக கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை

கந்தசஷ்டி தினம் தொடங்கி சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவை கொஞ்சமாக உட்கொண்டு முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். மதியம் ஒரே ஒரு முறை மட்டும் பச்சரிசி உணவுடன் தயிர் கொஞ்சம் சேர்த்து உண்ண வேண்டும். காலை, இரவு நேரத்தில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் குளித்து முடித்து, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வர வேண்டும். இரு வேளையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

முருகன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என வேண்டிய யாவும் கைகூட இந்த விரத முறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனை செய்தால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கைகூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். குழந்தை வரம் வேண்டும் தம்பதியினருக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here