தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

0
175

போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

‘தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

மக்களுக்குப் போதுமான அளவு உண்பதற்கு உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும். இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம் தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன. அதிலிருந்து மீள வேண்டும்.

முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும் 1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத் தர்களுக்கு சம்பளம் வழங்கவும் கடன்களை மீளச் செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம் வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன.
2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம் மறைப்பெருமானத்திலே நாட்டின் வளர்ச்சி வீதம் காணப்பட்டது. அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும்.
எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15 வீதத்திலிருந்து 8.5வீதமாக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15வீத வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது.

2026 இல் இந்த இலக்கை அடைய வேண்டும். நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.

2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு புத்துயிரளிக்க வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும்.

தேயிலை உற்பத்தித் துறையில் உள்ள குறைபாடுகளை அறிவோம். போதுமான உரம் கிடைத்துள்ளது. தேயிலைக் கைத்தொழிலை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும்
பொருளாதார மாதிரி (மொடல்) ஒன்றுடன் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்கு பெரும் மதிப்பு ஏற்படும்.

தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்” என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here