யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட வுள்ளதோடு விரைவில் பாண்டிச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு சரக்கு கப்பல் சேவையையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்திருந்த நிலையில், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றிற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அதிகாரிகள் சகிதம் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரதத்தில் வருகைதந்திருந்த கப்பல் மற்றும விமானப் போக்குவரத்துக்கான துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயுமாறு கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய அலோசனைக்கு அமைய துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையத்தை இன்று பார்வையிட்டார்.
இதன்போது எதிர்வரும் ஜூலை மாதம் திருச்சிக்கு யாழ்ப்பாண விமான நிலையத்துக்கும் இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பது என்றும் விரைவில் காங்கேசன்துறை பாண்டிச்சேரிக்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.