இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது.
வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி நிலையமும் எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட இருக்கின்றது .
பகவான் ராமகிருஷ்ண திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் பத்தாம் திகதி திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்றது .
அத்துடன் மலையகத்துக்கான சிவானந்தா நலன்புரி நிலையம் தொடர்ந்து வைக்கப்பட இருக்கிறது . இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ தலைமையில் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன .
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் சகல ஏற்பாடுகளையும் கவனித்து வரவேற்புரை நிகழ்த்தவிருக்கிறார்.
பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்த ஜி மகராஜ் கலந்து சிறப்பிக்க இலங்கை வருகிறார்.
இந்தியா காசி ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி சர்வரூபானந்த ஜி மகாராஜ் அவர்களும் மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்யதீபானந்த ஜீ மகராஜ் அவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
கும்பாபிஷேக கிரியைகளை சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு. வை.க .வைத்தீஸ்வர குருக்கள் நடத்தி வைக்க இருக்கின்றார்.
முன்னதாக 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை பிரதேசத்தில் மாபெரும்
ஊர்வலம் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
( வி.ரி.சகாதேவராஜா)