வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

0
74

வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது.

நிகழ்வானது தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

இம்முறை கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும். அவர் தனிநபர் ஒருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணத்தால் அவருக்கு பதிலாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் ஜெயம் என்று அழைக்கப்படும் நா.திரவியம் கலந்துகொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை தேர்தல் காலம் என்பதால் இம்முறை குறித்த நிகழ்வானது வழமை போன்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றி நினைவு கூறப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு பிளவின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவானது.
இதன்போது வடக்குப் புலிகள் வன்னிப் புலிகள் என அழைக்கப்பட்டனர்.

இதனால் இரு சாராருக்குமிடையில் இதே நாள் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற திடிர் மோதல் காரணமாக வன்னி புலிகளின் தாக்குதல் காரணமாக சுமார் 179 கிழக்கைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளிட்ட இரு பாலாரும் கொள்ளப்பட்டிருந்தனர்.

இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இவ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றமை வழக்கமாகும்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அன்று போராட்டத்தில் வீனான உயிரிழப்புக்களை தவீர்த்து இராஜ தந்திர ரீதியாக பேச்சுவார்த்தை ஊடாக எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் நான் உட்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம்.ஒஸ்லோவிலே இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையிலே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. சமஸ்டி முறையிலான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.இதன் அடிப்படையில் சமஸ்டி உடன் படிக்கையிலே கைச்சாத்திட்டதன் பிரகாரம் தவறாக புரிந்து கொண்ட தலைமைத்துவம் பிழையான கண்ணோட்டத்தில் பார்வையிட்டது. ஆகவே மீண்டும் ஒரு யுத்தத்தை தொடக்கி வைத்து உயிரிழப்பை ஏற்படுத்த விரும்பவில்லை.

வடக்கில் இருக்கும் போராளிகளோ கிழக்கில் இருக்கும் போராளிகளாயினும் சரி பெரும் தொகையான போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

‘ஜெயசிக்குரு மற்றும் ஆனையிறவு’ சமர் ஆகிய சமர்களில் களமாடிய வீரர்களின் உயிர்களின் இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம்.

ஆகவே இந்த இழப்பை தவீர்க்க முற்பட்ட வேளையில்தான் எங்களுக்கிடையில் பிளவு என்பது ஏற்பட்டது.இதன்போது தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் இருந்து ஒதுங்கியிருந்தோம்.எங்களது போராளிகளை நிராயுத பாணிகளாக யுத்தத்தில் ஈடுபடாது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பணித்திருந்தோம்.அந்த வேளையிலேதான் வன்னியிலிருந்து வந்த புலிகள் கிட்டத்தட்ட 500 போராளிகளை சுட்டு கொலை செய்தார்கள்.இது மதிப்புக்குரிய தேசிய தலைவருக்கு தெரிந்து நடந்ததா,தெரியாமல் நடந்ததா என்பது வேறு விடயம்.இதனை நான் அறியேன்.

ஆனால் இங்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்க முடியாது.தலைவரைக் காப்பாற்ற வன்னிக் களமுனைகளில் இருந்த தளபதிகள் பலர் சரணடைந்த பிற்பாடும் உயிருடன் எரியூட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இது போன்ற வேதனையான,கொடுமையான விடயங்கள் எல்லாம் நடந்தேறியது.

அதன் பிரகாரம்
அரசியல் நீரோட்டத்தில் ஊக்கப்படுத்துக் கொண்டிருந்த வேளையிலே இராஜன் சத்தியமூர்த்தி அண்ணன் கிங்சிலி இராசநாயகம் அவர்கள் சுடப்பட்டனர்.இவ்வாறு வகை, தொகையின்றி பொது மக்கள் நிராயுதபானிகள் மற்றும் போராளிகள் எல்லாம்; புலிகளால் கொள்ளப்பட்டனர்.

அன்று நாங்கள் விலகி இருந்தது என்பது நாங்கள் காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல மாறான ஆயுதங்களை கைவிட்டு ஒரு ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்றே ஆயுதங்களை கைவிட்டோம். ஆனால் அந்த காலத்திலே இருந்த ஊடகங்கள் அதனை திரிபுபடுத்தி கிழக்கு மாகானத்தில் உள்ள போராளிகள் அனைவரும் துரோகிகள் என்ற பட்டத்தைச் சூட்டி தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர்

குறிப்பாக ஜ.பி.சி ஊடகவியலாளர் நிராஜ்டேவிட் என்பவர் சம்பவங்களை நேரடியாக கண்டது போன்று பல விடயங்களை திரிபுபடுத்தி இளைஞர்களுக்கு அவர் ஊட்டியிருந்தார்.இன்று அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று பல போராளிகள் தளபதிகள் உலக நாடுகளில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனை நிச்சயம் புரிந்திருப்பார்கள்.கிழக்கு மாகான போராளிகளாக யாராவது துரோகியாக இருந்திருந்தால் வன்னியிலே நடந்த போர்க்களத்தில் இருந்த இராணுவ முகாம்களில் நின்றிருப்பார்கள்.ஆகவே ஒரு போராளியாவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்கள் அதனை நிருபிக்கட்டும் அதன் பிற்பாடு நாங்கள் இந்த கருத்தை வாபஸ் பெறுவோம்.ஆனால் நிராயுத பானிகளாக இருந்த இளைஞர்களை புலிகள் துரத்தி துரத்தி கொலை செய்தனர். வேறு வழியில்லை அதனால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள்.தவீர்க்க முடியாத விடயம் அது.அவர்கள் வந்து சுடும் போது தலையை கொடுப்பதற்கு இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல மடையர்களும் அல்ல. ஆகவே அன்று விடுதலைப் புலிகள் அரசியல் தலைமைகள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருந்தால் இன்ற அரசியலில் வெற்றி கண்டு உலகமே போற்றுகின்ற அளவிற்கு வடக்கு கிழக்கிலே பாரிய கட்டமைப்போடு இருந்திருக்கலாம்.இவற்றையெல்லாம் வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று 21 வருடம் எனவே பிளவிற்கு பின்பு பிறந்த இளைஞனின் வயது 21 ஆகும். எனவே அவ்வாறன இளைஞர்களுக்கு வரலாறுகள் தெரியாது.ஆகவே திரிபுபடுத்துகின்ற வரலாறுகளை ஏற்றுக்கொள்ளாமல் வரலாறுகளை தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் உங்கள் மத்தியிலே இருக்கிறோம் எங்கள் பின்னால் அணிதிரண்டு எங்களுடைய மாவீரர்கள் குடும்பங்கள் போராளிகள் குடும்பங்களை உயர்த்துவதற்கும் அவர்களது தியாகங்களை கௌரவப்படுத்துவதற்கும் அனைத்து மக்களும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றார்.

எனவே ஒவ் வொரு வருடமும் இதனை செயற்படுத்தி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ந குகதர்சன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here