மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. அத்தோடு, லக்ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
க.கிஷாந்தன்