64 000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மீட்பு ; சுமார் 600 பேர் வரை கைது

0
259

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64 000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளதோடு, 600 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.  இது சுமார் 10 பவுசர் எரிபொருள்களின் அளவாகும்.

அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்களால் பொலிஸார் வலியுறுத்தப்படுவதாகவும் அனைவரதும் பாதுகாப்பினைக் கருதி அவ்வாறான செயற்பாடுகளில் தலையிட வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாடுபூராவும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் எரிபொருளை பெற்று பதுக்கி அதிக விலைக்கு விற்கும் முயற்சிகள் குறித்து பல பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பெற்றோல் ஒரு லீற்றர் ஆயிரம் ரூபா முதல் 2500 ரூபா வரை விற்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதன் போது 675 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 636 லீற்றர் பெற்றோல் , 33 462 லீற்றர் டீசல் , 11 100 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக எரிபொருட்களைப் பதுக்கும் இவ்வாறான சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here