இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கு டயலொக் அனுசரணை

0
174

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கு 2024ஆம் ஆண்டு வரை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கை தேசிய வலைப்பந்து சம்மேளனத்திற்கு (NFSL) 2018ஆம் ஆண்டு முதல் தடவையாக டயலொக் தனது அனுசரணையை வழங்கியது. மேலும், பல ஆண்டுகளாக தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதன் மூலம் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும், திறமையான வீரர்களை உருவாக்குவதற்கும் டயலொக் தமது ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

 இந்தநிலையில், இலங்கை வலைப்பந்து சம்மேளத்துக்கு டயலொக் மீண்டும் அனுசரணை வழங்க முன்வந்தமை தொடர்பில் அந்த சம்மேளனத்தின் தலைவர் லக்ஷ்மி விக்டோரியா கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த சில ஆண்டுகளாக கொவிட் 19 தொற்றின் காரணமாக எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் தேசிய சிரேஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரை வெற்றிகரமாக நாங்கள் நடத்தினோம். இது எமது அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்க முடியாது. எனவே, இவ்வாறு இலங்கையில் வலைப்பந்து விளையாட்டுக்கு ஆதரவளிப்பதில் டயலொக் ஆசிஆட்டா தமது அனுசரணையை நீடித்தமைக்காக டயலொக்கிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.

இலங்கை தேசிய வலைப்பந்து அணியானது ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தொடர்ந்து சிறப்பாக பிரகாசித்து வருவதுடன் தற்போது நடப்புச் சம்பியனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here